Archive for the ‘நிகழ்வு’ Category
விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு அறிமுக நிகழ்ச்சி
கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு நாள் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி நிர்வாகம் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுக நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியானது சென்னை, பெரம்பலூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இரண்டு பகுதிகளிலுள்ள விவேகானந்தா பள்ளிகளில் நடப்பெற்றது.
சென்னையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியில் பங்கு கொண்டதுடன் உபுண்டு பற்றிய அறிமுகத்தையும் பற்றி அறியும் வாய்ப்பை பெற்றனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை லினக்ஸை வட்டு மூலம் எப்படி இயக்குவது மற்றும் எப்படி நிறுவுவது என்பது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
மேலும் உபுண்டுவில் உள்ள கல்விக்கான மென்பொருள்கள் மூலம் எப்படி அன்றாடம் பாடங்களை படித்து பயன்பெறுவது என்பது பற்றியும் அறிமுகம் செய்து காட்டப்பட்டது. +2 மாணவர்கள் சிலருக்ககு உபுண்டுவில் “C” மூலம் நிரல்கள் எழுதுவது பற்றியும் அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. பின்னர் உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் எழுதி வழங்கப்பட்டன.

uabuntu-demo
இந்நிகழ்ச்சி மூலம் பள்ளிகளுக்கு என்று தனி வட்டு ஒன்றை உருவாக்கவும் உபுண்டு தமிழ் குழுமம் முடிவு எடுத்துள்ளது, அதை வருங்கால நிகழ்ச்சியிகளில் வழங்கப்படும். மேலும் இதுபோன்ற பள்ளி நிகழ்ச்சிகள் மூலம் கட்டற்ற மென்பொருள் அனைவரையும் சென்றடைய செய்தமைக்கு விவேகானந்தா பள்ளி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.
நிகழ்ச்சி இனிதே நடந்திட தன்னார்வத்துடன் முன்வந்து பங்களித்து உதவி புரிந்தமைக்கு இரவிச்சந்திரன், ஸ்ரீதர் – சுதேசிய இயக்கத்திற்கும், இராஜி, பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் – உபுண்டு தமிழ் மற்றும் லினக்ஸ்-பயனர்- குழுமத்திற்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களை கான இங்கே செல்லவும்.
கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் – அறிவியல் நகரம், சென்னை
சென்னை அக்டோபர் 20, “கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்” எனும் கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப் பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள ஆறு பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை முப்பது
மாணவர்கள் மாலை முப்பது மாணவர்கள் என பயிற்சியின் பாங்கு அமைந்திருந்தது.
கலந்து கொண்ட மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகம், வேதியியல், இயற்பியல் கணிதம்,
ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பதற்குத் துணை புரியும் கட்டற்ற மென்பொருள்கள் சில விளக்கப்பட்டு, அவற்றை அவர்களே செய்து பார்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. கணினி வழி தமிழ் அறிமுகமும் தட்டச்சுப் பயிற்சியும்
வழங்கப்பட்டது. மாணவர்களோடு பள்ளி ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு வானவியல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பி. தேவதாஸ்
தொடங்கிவைத்தார். அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் முனைவர் பி. ஐயம்பெருமாள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை மாணவர்களுக்காக இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை & NRCFOSS-AU வின் பாரதி சுப்பிரமணியம் & ஸ்ரீ ராமதாஸ், உபுண்டு தமிழ்க் குழும தொடர்பாளர் தங்கமணி அருண் ஆகியோர் நடத்தினர்.
பி.கு:
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி பள்ளிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உதவிய அறிவியல் நகரத்தின் அலுவலர் ஹேமா,
நிகழ்ச்சிக்கு மடிக்கணினிகள் தேவைப்பட்ட போது தங்களது மடிக்கணினியை தந்துதவிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் சௌமியா கிருஷ்ணன், இராஜேஷ்,
நிகழ்ச்சி குறித்த தங்கள் அலோசனைகளை வழங்கிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் பி. இராமன், தியாகு
ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலந்து கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபுண்டு இயங்குதள வட்டு உள்ளிட்ட ஆவணங்களின் தயாரிப்பிற்கான வளங்களை வழங்கிய கட்டற்ற திறந்த மூல மென்பொருள் வளத்திற்கான தேசிய மையம்,
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி அணுகிய போது அனுமதி தந்து ஊக்கமளித்து உதவிய அறிவியல் நகரத்தின் செயற்குழுவின், தலைவர் பேராசிரியர் எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மென்விடுதலை நாள் விழா, சென்னை
வருடா வருடம் செப்டம்பர் திங்கள் மூன்றாவது சனிக்கிழமை மென்விடுதலை நாளாக கட்டற்ற மென்பொருள்[1] ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது சமயம் உலகம் நெடுகிலும் உள்ள குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் தத்தமது இடங்களில் மென்விடுதலைக் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு
நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.
அதே போல் சென்னை மாநகரத்தில் மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் 19/09/2009, சனிக்கிழமை அன்று – சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுவால், பிர்லா கோளரங்கத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள மென்விடுதலை நாள் விழாவில், விளக்க உரைகளுக்கும் அரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மென்பொருளை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கீழ்க்காணும் சுதந்தரங்கள் அளிக்கப்படுவதை, அரசியல் ரீதியாக உறுதி செய்யவைக்க ஒன்றுபடுவோமாக!
* எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது
சுதந்தரம்).
* நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல்
ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்).
முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
* பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம்.
(மூன்றாவது சுதந்தரம் )
* ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த
மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண்
நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும். (நான்காவது சுதந்தரம்)
கேடீயீ தமிழாக்கப் பயிற்சி பட்டறை
குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம் உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம். பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக, பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருத்தல் நல்லது.
இடம்:
என் ஆர் சி பாஸ்,
ஏயு-கேபிசி ஆராய்ச்சி மையம்,
எம் ஐ டி வளாகம்,
குரோம்பேட்டை,
சென்னை.
தேதி: 28/06/2009
நேரம்: காலை 10.30
ஆரக்கள்ளின் சன் உட்கொள்கை எழுப்பும் ஐயங்கள்…
ஜாவா தொழில் நுட்பத்தின் காரண கர்த்தாவான சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. ஐபிஎம் சன்னை வாங்கப் போகிறது என்று செய்திகள் கசிந்து பின்னர் இல்லையென ஆன போது சற்றே பெருமூச்சு விட்டிருக்கையில் இப்படியொரு சேதி! நிற்க.
இத்தகைய கும்பெனி உட்கொள்கைகள் (அக்யூசிஷன்) ஏற்படும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகள் பல இருக்கும் என்ற போதும் – மாடாய் உழைத்து எல்லாம் தந்த தொழிலாளர்களையும் சேர்த்து விலைபேசும் போது – தொழிலாளர்களின் கருத்துக்கள் ஏன் கேட்கப்படுவதில்லை? மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் கம்பனியை யார் நடத்தினால் என்ன என இவர்களும் ஏன் இருக்கிறார்கள்? தங்களது கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என இவர்கள் ஏன் நினைப்பதில்லை?
ஆரக்கிள் – மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போன்றே ஒரு தனியுரிம மென்பொருள் நிறுவனம். எப்படி டெபியன் (நான் பயன்படுத்தி வரும் உபுண்டுவை தவிர்த்த காரணம் கீழே விளங்கும்) உள்ளிட்ட கட்டற்ற இயங்குதளங்கள் விண்டோஸுக்கு ஆப்பு வைக்க தொடங்கியுள்ளனவோ அதே போல் ஆரக்கள்ளின் தரவுத் தள ஏக போக சாம்ராஜ்யத்தை அசைத்துக் காட்டியதில் மிகப்பெரிய பங்கு மை எஸ் க்யூ எல் எனும் கட்டற்ற தரவுத் தளத்திற்கு உண்டு.
ஆரக்கிள் – ஜாவா – விண்டோஸ் – வெப்லாஜிக் என்றிருந்த பயன்பாட்டு உருவாக்க தனியுரிம உலக நெறியை தகர்த்த கூட்டணியாகும் குனு/ லினக்ஸ் – அபாச்சி- மை எஸ் க்யூ எல் – பி எச் பி.
சன் மைக்ரோசிஸ்டமும் ஒரு காலகட்டத்தில் தனியுரிம மென்பொருள் ஏகாதிபதியாக கொடி கட்டித் திகழ்ந்து பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதன் படைப்புகளை கட்டற்று செய்வதென முடிவு கொண்டது. இது கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து மை எஸ் க் யூ எல்லை விலைக்கும் வாங்கியது.
வரலாறு இப்படி இருக்க இன்றைய இச்சம்பவம் பல்வேறு வினாக்களை நம்முன்னே எழுப்பி நிற்கின்றது..
- கும்பனிகளால் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு தொழிலாளர்களாகவும் – தன்னார்வலர்களாகவும் பங்களித்து வருவோர் இத்தகைய சூழலில் எத்தகைய முடிவினை மேற்கொள்வர்? மேற்கொள்ள வேண்டும்?
- ஒரு கும்பனி கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டை ஏற்றொழுகினாலும் – கும்பனி முறையில் உள்ள இக்கொடுக்கல் – வாங்கல் குற்றத்தின் காரணமான – தன்னை அது இழக்க நேரிடும் போது – அது அதன் பங்களிப்பாளர்களக்கு தரும் உத்தரவாதம் தான் என்ன? (தற்சமயம் நான் பங்களித்து வரும் உபுண்டு திட்டமும் ஒருவகையில் இத்தகையது என்கிற போது – எனக்கு நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வியுமாகும் இது – ஏற்கனவே சூசேவை நாவல் வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன…)
- இவற்றைக் கொண்டு பார்க்கிற போது முற்றிலும் சமூகம் சார்ந்த முறையால் உந்தப்பட்ட கட்டற்ற மென்பொருள் திட்டங்களே மேலானவையாக – கட்டற்ற தன்மைக்கு இறுதி வரை உறுதியளிப்பதாக தோன்றுகிறதே! ஆனால் கும்பனிகளைச் சாராது இவற்றை தொழில் ரீதியாக வெற்றி பெறச் செய்வது எப்படி?
இச்சம்பவத்திற்கே உரியதாக..
- கடந்த சில வருடங்களாக சன் மைக்ரோசிஸ்டம் உலகளாவி மேற்கொண்டு வரும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களின் நிலை என்னவாகும்? அவற்றின் பிரதி ஆரக்களின் நிலைப்பாடு எப்படி அமையும்?
- மை எஸ் க்யூ எல்லை சன் வாங்கியது.. சன்னை ஆரக்கிள் வாங்கியுள்ளது.. மை எஸ் க்யூ எல்லும் ஆரக்கிள்ளும் கோட்பாட்டு ரீதியாகவும் சரி – தொழில் ரீதியாகவும் எதிரெதிர் படைப்புகள். அப்படியிருக்க ஆரக்கள்ளிடம் விலை போய்விட்ட மை எஸ் க்யூ எல்லின் வருங்காலம் என்ன?
தொடர்புடைய பதிவுகள்:
http://www.pluggd.in/technology/oracle-sun-acquisition-4027/
http://blogs.computerworld.com/oracle_sun_what_happens_to_mysql
ஈரோட்டில் அரங்கேறிய இன்டிரிபிட் ஐபக்ஸ்…
உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸின் தமிழ் வடிவம் ஈரோடு ஐடி அசோசியேஸன் சார்பில், நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஐடி அஸோசியேஸனின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். உபுண்டு தமிழ் குழுமம்/ சென்னை குனு லினக்ஸ் பயனர் குழு சார்பாக ஸ்ரீராமதாஸ், ஊட்டி பத்மநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தித் தந்தனர்.
கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் தமிழ் வசதிகள் செய்து கொள்வது, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் பொதிகள் நிர்வாகம், பாடல் – திரைப்படங்கள் கேட்க – பார்க்கப் பயன்படுத்தப்படும் பயன்பாடுகள், குனு/ லினக்ஸ் கோப்பு முறைமை உள்ளிட்ட தலைப்புகளில் செய்முறை விளக்கங்கள் தரப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
- இந்நிகழச்சியில் உபுண்டுவின் நேரடி வெளியீடு பயன்படுத்தப்படாமல் திரையில் தோன்றும் முதல் மொழியே தமிழ் மொழியாகக் கொண்ட மாற்றப்பட்ட வடிவத்தினை நிறுவி பயன்படுத்தியமை. (தொடர்ச்சியாக பங்களித்து வரும் குநோம் உள்ளிட்ட தமிழாக்கக் குழுக்களுக்கு நன்றி.)
- சென்னைக்கு வெளியே நிகழச்சியினை நடத்திட வேண்டும் என நாங்கள் கோரிய போது மிக வேகமாக செயல்பட்டு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நடத்திக் காட்டிய ஈரோடு ஐடி அசோசியேஸன்.
- ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஈரோடு ஐடி அசோசியேஷன் உறுப்பினர்கள்.
- கற்றது விட்டுப்போகக் கூடாது என்பதற்காக, அதிரடியாக இன்னும் சில வாரங்களுக்குள் கலந்து கொண்டோருக்காக ஈரோடு ஐடி அசோசியேஸன் அறிவித்துள்ள உபுண்டு போட்டி.
கனிவான உபசரிப்போடு இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முன்னின்று உழைத்த திரு. இராஜா, திரு பாலு, திரு ஸ்ரீநிவாஸன், திரு முத்தரசு, திரு மனோகர் உள்ளிட்ட ஈரோடு ஐடி அசோசியேஷனின் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். முழுமையான மன நிறைவை ஏற்படுத்திய நிகழ்வு இது.
இந்நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட மின்னேட்டினைப் பெற்றுக் கொள்ள: http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/nov/erode/
உபுண்டு ஆசான் திட்டம்
வணக்கம்,
வரும் டிசம்பர் மாதம் தொடங்கி உபுண்டு தமிழ் குழுமம் “உபுண்டு ஆசான் திட்டம்”
எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த விழைகிறது. இதன்படி உபுண்டு தமிழ்
குழுமத்தை சேர்ந்த ஆசான்கள் தமிழகம் நெடுகிலும் பயணித்து
உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்டு குனு லினக்ஸ் சார்ந்த
பாடங்களை பலதரப்பட்ட மக்களுக்கு புகட்டுவர்.
முதற்கண் இரண்டு விதமான பாடங்களை உபுண்டு தமிழ் குழுமம் வழங்க விரும்புகிறது…
1) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் குனு/ லினக்ஸ்
பயிற்சி வகுப்பு – ஆசிரிய/ மாணவர்களுக்கானது
2) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாள் குனு/ லினக்ஸ் பயிற்சி
வகுப்பு – அலுவலர்/ பொதுவானது
தேவைக்கேற்ப இவற்றின் தன்மையை மாற்றிக் கொள்ளலாம். மேலும் கோரும்
நிறுவனத்தை/ அமைப்பைச் சார்ந்து பாடங்கள் ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு
மொழிகளிலும் போதிக்கப்படும்.
இத்திட்டம் பரஸ்பர ஆதாயத்தினை கருதி மேற்கொள்ளப்படுகிறது. உபுண்டு தமிழ்
குழுமம் வருங்காலங்களில் தனது திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் தன்னைத்
தானே சார்ந்திருக்க துணை நிற்கும் ஒரு வழியாகவும் இதனைக் கருதுகிறோம்.
உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் எடுக்கும் ஆற்றல்
தங்களுக்கும் இருக்குமாயின் தங்களையும் உபுண்டு ஆசானாக வரவேற்கிறோம்.
தமிழில் எழுதிப் பேசி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் எளிய ஆற்றலே
இதில் தங்களை இணைத்துக் கொள்ளப் போதுமானது.
மேற்குறிப்பிடப்பட்ட பாடத்திட்டங்களைத் தாண்டி வருங்காலங்கில் நிரலாக்கம்
உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சேர்க்கவிருப்பம். அத்தகையதை இப்போதே
தங்களால் தர முடியுமானாலும் பெருமகிழ்ச்சி.
குனு லினக்ஸ் பயனர் குழுக்கள், அரசுத் திட்டங்கள், தன்னார்வ அமைப்புகள்,
கல்விக் கூடங்கள், தனியார்/ வர்த்தக நிறுவனங்கள் என அனைவருடனும்
இவ்விடயத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கின்றோம்.
உங்களுக்குத் தெரிந்த கல்விக்கூடங்கள், குனு லினக்ஸ் வசதி தேவைப்படும்
அமைப்புகள் என அனைவருக்கும் இத்திட்டம் பற்றிய அறிவிப்பினை
தெரியப்படுத்துங்கள். தாங்கள் சார்ந்துள்ள அமைப்பில் இத்தகைய
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் amachu@ubuntu.com என்ற
முகவரிக்கு உடன் மடல் எழுதுங்கள். நாங்கள் நாள் குறிக்கத்
தொடங்கிவிட்டோம்.
இது குறித்த விகி பக்கம்:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasan_Thittam
உபுண்டு ஆசான்கள் பற்றி அறிய/ தாங்களும் இணைய விரும்பிடின் பதிய:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasangal_Vivaram
கட்டற்ற மென்பொருள் புத்தகம் வெளியிடப்பட்டது
ரிச்சர்ட் எம். ஸ்டால்மனின் “கட்டற்ற மென்பொருள்” பற்றிய தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள், திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மென்விடுதலை நாள் விழாவின் ஒரு பகுதியாக, 20 செப் 08 அன்று புத்தகமாக வெளியிடப்பட்டது.
புத்தகத்தை ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் பேரா. ஆ. கனகராஜ் வெளியிட கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, இந்தியாவின் வழிகாட்டிகளுள் ஒருவரான கிரண் சந்திரா பெற்றுக்கொண்டு தமிழுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனை. இராஜா, சென்னை குனு லினக்ஸ் பயனர் குழுவின் பொறுப்பாளர் திரு. பாரதி சுப்ரமணியம், ஜெயா பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத் துறை தலைவர் திரு. கபாலீசுவரன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆழி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. செந்தில்நாதன் புத்தகத்தினை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அந்நாள் முழுவதற்குமான அனைத்து நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளையும், திரு. குமரன் அவர்களின் தலைமையிலான அக்கல்லூரியின் ஜெயா பாஃஸ் கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
புத்தகத்தை வெளியிட்டு பேசிய பேரா. ஆ. கனகராஜ், ஜெயா கல்விக் குழுமங்களின் பயன்பாட்டிற்காக நூறு பிரதிகளை பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். கட்டற்ற மென்பொருளின் சிறப்புகள் பற்றி கிரண் சந்திரா அவர்கள் உரையாற்றினார்கள்.
பல்வேறு கடைகளை அமைத்து கட்டற்ற மென்பொருள் பற்றிய பல்வேறு கருவிகளை வருகை புரிந்தோருக்கு மாணவர்கள் விளக்கிக் காட்டிய வண்ணம் இருந்தனர். பல்வேறு தலைப்புகளில் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
கட்டற்ற மென்பொருள் – புத்தக வெளியீடு
மென்விடுதலை நாள் – 2008 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கட்டற்ற மென்பொருள் பற்றிய ரிச்சர்டு எம். ஸ்டால்மேனின் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படுகின்றது.
புத்தக விவரம்:
பெயர்: கட்டற்ற மென்பொருள்
ஆசிரியர்: ரிச்சர்டு எம். ஸ்டால்மேன்
தமிழாக்கம்: ம ஸ்ரீ ராமதாஸ்
பதிப்பாளர்: ஆழி பப்ளிகேஷன்ஸ், கோடம்பாக்கம், சென்னை – 24. தொ.பே: +91 44 43587585
கீழ்காணும் நிகழ்வுகளில் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.
1) மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் – 2008
ஜெயா பொறியில் கல்லூரி,
திருநின்றவூர்,
சென்னை.
தேதி: 20 செப் 08
நேரம்: காலை 9.30 மணி
தொடர்பாளர்: சிவாஜி – 99415 71690
இணைய முகவரி: http://jayafossclub.org/
2) விடுதலையும் மென்பொருளும் சந்திப்பு
ரஷ்ய பண்பாட்டு மையம்
27 கஸ்தூரி ரங்கா சாலை, (கத்தீட்ரல் ரோடு அருகில்)
சென்னை-600018
தேதி: 21 செப் 2008
நேரம்: மாலை 4.00 மணி
தொடர்பாளர்: பாலாஜி – +91 98407 87427
இணைய முகவரி: http://www.freedomandsoftware.info/
இவ் வெளியீட்டு விழா(க்களில்)வில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இச் செய்தியை பரப்பிட உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம். என்றும் மலரும் நினைவுகளாக இவை திகழட்டும்.
பி.கு: தாங்கள் வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள குனு/ லினக்ஸ் ஆர்வலர்களைக் கொண்டு வெளியீட்டு நிகழ்ச்சியினை தாங்களே ஏற்பாடு செய்து புத்தகத்தை வெளியிட்டும் உதவலாம். விவரங்களுக்கு தனித்து மடல் அனுப்பவும்.
மென்பொருள் படைப்புரிமம் – பாதிப்படைவோர் சந்திப்பு
மென்பொருள் படைப்புரிமத்தினால் பாதிப்படைவோர் சந்திப்பொன்றிற்கு இந்திய அறிவு சார் சொத்து நிறுவனம்(?) ஏற்பாடு செய்திருக்கிறது.
தேதி : ஆகஸ்டு 28, 2008
நேரம் : காலை 10 முதல் 1 வரை
இடம்: அறிவுசார் சொத்து அலுவலகம், கிண்டி, சென்னை.
இயலுமாயின் கலந்து கொண்டு எதிர்ப்புகளை தெரிவிக்கவும். விவரங்கள் http://ipindia.nic.in முகவரியிலும் வரைவு http://ipindia.nic.in/ipr/patent/DraftPatent_Manual_2008.pdf முகவரியிலும் கிடைக்கப் பெறுகிறது.
இது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை: http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html










