Archive for October, 2008
உபுண்டுவில் ஸ்கைப்…
ஸ்கைப் உலகின் பல மூளைகளிலும் இருக்கும் உற்றாருடன் கதைக்க பயன்படும் ஒரு தனியுரிம மென்பொருளாகும். இதனைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். கட்டாயமான சூழல் உருவாகும் போது உபுண்டு இயங்கு தளத்தில் அதனை நிறுவும் வழிகள் இங்கே விவரிக்கப்படுகின்றன. இதற்குரிய கட்டற்ற மாற்றாக எகிகா திகழ்கிறது.
உபுண்டு இயங்குதளத்தினை துவக்கிய பிறகு, Alt-F2 கொடுத்து எழும்பும் Run Application சாளரத்தில் கீழ்காணும் வரியை இடவும்,
gksudo gedit /etc/apt/sources.list
(இது பொதிகள் எங்கே கிடைக்கின்றன என உபுண்டுவிற்கு தெரிவிக்கும் வடிவமைப்புக் கோப்பை gedit எனும் பயன்பாட்டைக் கொண்டு தொகுக்க திறக்கும் படி பணிக்கிறது. அக்கோப்பு நிர்வாக உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே தொகுக்க இயலுமாகையால் gksudo உடன் பயன்படுத்தப்படுகிறது.)
கடவுச் சொல் தரும்படி கோரப்படுவீர்கள். தங்கள் பயனர் பெயருக்குரிய கடவுச் சொல்லினைக்கொடுத்ததும்
திறக்கப்படும் கோப்பின் இறுதி வரியாக இதனைச் சேர்க்கவும்.
deb http://download.skype.com/linux/repos/debian/ stable non-free
இவ்வரியே ஒளியூட்டப்பட்டு வலது புறமாகத் தெரியும் திரைக்காட்சியிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாங்கள் முனையத்தினை துவக்கவேண்டும். இதற்கு Applications –> Accesories –> Terminal மூலம் இதனைச் செய்யலாம்.
முனையத்தில் கீழ்காணும் இரண்டு கட்டளைகளை கொடுப்பதன் மூலம் தங்கள் கணினியில் ஸ்கைப்பினை தாங்கள் நிறுவிக் கொள்ளலாம்.
$ sudo apt-get update
பொதிகளின் பட்டியலை புதுப்பிக்க இது உதவுகிறது. கிடைக்கக் கூடிய பொதிகளின் பட்டியலில் skype சேர்க்கப்படும். நிறுவல், நிர்வாகப் பணியாகையால் இவ் ஆணை இடும் போது கடவுச் சொல்லினைத் தரும் படி கோரப்படுவீர்கள்.
$ sudo apt-get install skype
இவ் ஆணை ஸ்கைப் தனை நிறுவிட துணை புரிகிறது. இவ்வகையில் பொதிதனை நிறுவ இணைய இணைப்பு பெற்றிருப்பது அவசியம்.
நிறுவி முடித்ததும் ஸ்கைப்தனை Applications –> Internet –> Skype வழியாக தொடங்கலாம்.
ஆறு மாதங்கள் – கணிமொழி வளர நீங்களும் எழுதலாமே!
கணிமொழி (http://kanimozhi.org.in) – கட்டற்ற மென்பொருள் சார்ந்த
விடயங்களை/ நடப்புகளை தமிழில் கொண்டு வர வேண்டி துவக்கப்பட்ட திட்டம்.
கட்டற்ற யாவருக்குமான கொள்கைகளால் உந்தப்பட்ட இந்த திட்டம் ஆறு
மாதங்களைக் கடந்து தவழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழில் எளிமையாக எழுதத் தெரிந்த எவரும் தங்களுக்கென ஒரு பயனர் கணக்கை
துவக்கி தங்களுக்குத் தெரிந்த கட்டற்ற மென்பொருள் சார்ந்த விடயத்தைப்
பற்றி எழுதத் துவங்கலாம்.
இது வரை பங்களித்து வந்த கணிமொழியின் கட்டுரையாசிரியர்கள்
அனைவருக்கும்(1) நன்றி, பாராட்டுக்கள். உங்களையும் கணிமொழிக்குப்
பங்களிக்க அழைக்கிறோம்.
(1)
1. அகிலன் – எம்ஐடி மாணவர்
2. அன்னபூரணி – இல்லத்தரசி
3. அப்துல் ஹலீம் – தென்கிழக்கிலங்கை பல்கலைக்கழகம்
4. அருண் – உபுண்டு தமிழ் குழும பொறுப்பாளர்
5. பாரதி சுப்ரமணியம் – மிடாஸ் கம்யூனிகேஷன்ஸ்
6. ஸ்ரீ ருத்ரன் – பங்களூரு
7. ஸ்ரீநிவாஸன் – லூகாஸ் டிவிஎஸ்
8. இரமண்ராஜ் – வழக்குரைஞர்
9. ஸ்ரீ ராமதாஸ் – ![]()
10. சௌமியா – முன்னாள் என் ஆர் சி பா ஸ் ஊழியர்
11. தணிகைராஜன் – தற்போதைய பொறுப்பாளர்
முக்திக்கு முக்தி – விடுதலையை உணர்வோம் – கும்பகோணம்
வாழ்வின் முக்திக்கு வழிகாட்டும் குடந்தை மாநகருக்கு மென்பொருள் முக்திக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆம். கட்டற்ற திறந்த மூல மென்வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு லினக்ஸ் பயனர் குழுவும் இணைந்து
செப் 27, 28 தேதிகளில் “விடுதலையை உணர்வோம்” என்ற தலைப்பில் இரண்டு நாள் கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்பினை, தஞ்சை சண்முகா பல்கலைக்கழகத்தின் ஸ்ரீநிவாஸ இராமானுஜ மையம், கும்பகோணத்தில் நடத்தின.
பல்கலைக் கழக மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் கொள்கை துவங்கி குனு லினக்ஸ் இயங்கு தளம் நிறுவும் முறை (உபுண்டு), பொதிகள் பராமரிப்பு, சி, சி++, பேர்ல், பைதான் நிரல்களை ஒடுக்கி இயக்கும் வழிமுறைகள், கிளேட், எரிக் உள்ளிட்ட உருவாக்கக் கருவிகள் அறிமுகம், குனு/ லினக்ஸ்+அபாச்சி+மை எஸ் க்யூ எல்+பிஎச்பி அறிமுகம், ரூபி ஆன் ரெயில்ஸ் அறிமுகம், சப்வர்ஷன் அறிமுகம், பயனர் குழுக்கள் இயங்கும் விதம் உள்ளிட்ட பல விடயங்களில் செய்முறையோடு கூடிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஸ்ரீநிவாஸ இராமனுஜ மையத்தின் கட்டற்ற திறந்த மூல மென்பொருள் குழுமம் துவக்கப்பட்டது. இதன் மூலம் குடந்தை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குனு லினக்ஸ் விழிப்புணர்வினை வருங்காலத்தில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் கொள்ளப்ட்டது. நிகழச்சிக்கான விரிவான ஏற்பாட்டினை மையத்தின் கணினித் துறைத் தலைவர் ஹரி பிரகாஷ் செய்திருந்தார். இராமதாசும் பாஸ்கரும் இவ்விரண்டு நாள் நிகழ்ச்சினை ஒன்றிணைந்து நடத்தினர்.
உபுண்டு ஆசான் திட்டம்
வணக்கம்,
வரும் டிசம்பர் மாதம் தொடங்கி உபுண்டு தமிழ் குழுமம் “உபுண்டு ஆசான் திட்டம்”
எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த விழைகிறது. இதன்படி உபுண்டு தமிழ்
குழுமத்தை சேர்ந்த ஆசான்கள் தமிழகம் நெடுகிலும் பயணித்து
உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்டு குனு லினக்ஸ் சார்ந்த
பாடங்களை பலதரப்பட்ட மக்களுக்கு புகட்டுவர்.
முதற்கண் இரண்டு விதமான பாடங்களை உபுண்டு தமிழ் குழுமம் வழங்க விரும்புகிறது…
1) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் குனு/ லினக்ஸ்
பயிற்சி வகுப்பு – ஆசிரிய/ மாணவர்களுக்கானது
2) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாள் குனு/ லினக்ஸ் பயிற்சி
வகுப்பு – அலுவலர்/ பொதுவானது
தேவைக்கேற்ப இவற்றின் தன்மையை மாற்றிக் கொள்ளலாம். மேலும் கோரும்
நிறுவனத்தை/ அமைப்பைச் சார்ந்து பாடங்கள் ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு
மொழிகளிலும் போதிக்கப்படும்.
இத்திட்டம் பரஸ்பர ஆதாயத்தினை கருதி மேற்கொள்ளப்படுகிறது. உபுண்டு தமிழ்
குழுமம் வருங்காலங்களில் தனது திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் தன்னைத்
தானே சார்ந்திருக்க துணை நிற்கும் ஒரு வழியாகவும் இதனைக் கருதுகிறோம்.
உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் எடுக்கும் ஆற்றல்
தங்களுக்கும் இருக்குமாயின் தங்களையும் உபுண்டு ஆசானாக வரவேற்கிறோம்.
தமிழில் எழுதிப் பேசி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் எளிய ஆற்றலே
இதில் தங்களை இணைத்துக் கொள்ளப் போதுமானது.
மேற்குறிப்பிடப்பட்ட பாடத்திட்டங்களைத் தாண்டி வருங்காலங்கில் நிரலாக்கம்
உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சேர்க்கவிருப்பம். அத்தகையதை இப்போதே
தங்களால் தர முடியுமானாலும் பெருமகிழ்ச்சி.
குனு லினக்ஸ் பயனர் குழுக்கள், அரசுத் திட்டங்கள், தன்னார்வ அமைப்புகள்,
கல்விக் கூடங்கள், தனியார்/ வர்த்தக நிறுவனங்கள் என அனைவருடனும்
இவ்விடயத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கின்றோம்.
உங்களுக்குத் தெரிந்த கல்விக்கூடங்கள், குனு லினக்ஸ் வசதி தேவைப்படும்
அமைப்புகள் என அனைவருக்கும் இத்திட்டம் பற்றிய அறிவிப்பினை
தெரியப்படுத்துங்கள். தாங்கள் சார்ந்துள்ள அமைப்பில் இத்தகைய
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் amachu@ubuntu.com என்ற
முகவரிக்கு உடன் மடல் எழுதுங்கள். நாங்கள் நாள் குறிக்கத்
தொடங்கிவிட்டோம்.
இது குறித்த விகி பக்கம்:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasan_Thittam
உபுண்டு ஆசான்கள் பற்றி அறிய/ தாங்களும் இணைய விரும்பிடின் பதிய:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasangal_Vivaram
தேவாலயமும் அங்காடியும் – 2
முதற் கட்டுரைக்கு சொடுக்கவும்..
யுனிக்ஸ் போதனைகளான சிறு கருவிகள், துரிதமான முந்தைய வடிவமைப்பு, படிப்படியாக விரிவுரும் நிரலாக்கம் இவைகளை நான் பல வருடங்களாக உபதேசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், ஒரு நெருக்கடியான சிக்கல் இருந்ததற்குப் பின்னால் (எதையும் சாராத) ஒரே மையநோக்கு அணுகுமுறை ஒன்று அவசியம் என்றும் உணர்ந்தேன்.
மிக முக்கியமான மென்பொருள், (இயக்க அமைப்புகள் மற்றும் Emac நிரலாக்க பதிவாளர் போன்ற மிகப்பெரிய கருவிகள்) தனித்தனி வல்லுநர்களால் அல்லது உயரிய தனிமையில் வேலைசெய்யும் மேதாவிகளால் மிக கவனமாக தேவாலயங்களாக எழுப்பப்பட வேண்டுமென்று நம்பினேன்.
‘விரைவாக வெளியிடு அடிக்கடி வெளியிடு, உன்னால் முடிந்தளவு அதிகாரம் கொடு, கண்டபடி கலப்புக்குத் தயாராக இரு’ என்றபடி லைனஸ் டோர்வால்ட்ஸின் உருவாக்கப்பாணி எனக்குத் திகைப்பூட்டுவதாக இருந்தது. பயபக்தியுடன் அமைதியாக தேவாலயம் கட்டும் முறை இங்கு இல்லை. மாறாக லைனக்ஸ் சமூகம் வேறுபட்ட குறிப்பேடுகளையும் வழிமுறைகளையும் கொண்ட ஒரு சலசலப்பான பெரிய அங்காடி போன்று (லைனக்ஸ் சுவடிக் குறியிடங்களால் சரியாக அடையாளமிடப்பட்டு இருந்தது) இருந்தது. அடுத்தடுத்த அற்புதங்களால் மட்டுமே இதிலிருந்து ஒரு இசைந்திணைகிற, ஒரு நிலையான அமைப்புமுறை வெளிவருவதற்கானத் தோற்றம் தோன்றும்!
இந்த அங்காடி முறை நன்றாகவே வேலை செய்வதாகத் தோன்றும் உண்மை எனக்கு ஒரு தனி அதிர்ச்சியைத் தந்தது. நான் இதில் இயங்க, இயங்க, தனித்ததனி செயல்திட்டங்களில் கடுமையாக உழைத்தது மட்டுமன்றி, இந்த லைனக்ஸ் உலகம் குழப்பத்தில் சிதறிடாமல் இருப்பதையும், தேவாலயம் எழுப்புவோர் கற்பனை செய்ய முடியாதளவு விரைவாக மென்மேலும் வலுவாகிக் கொண்டுருப்பதையும் புரிந்துகொள்ள முயற்சிகப்பதிலும் உழைத்தேன்.
அது 1996 ஆம் வருடத்தின் நடுவில் எனக்கு புரிய ஆரம்பிப்பதாக உணர்ந்தேன். இதை சோதிக்க சரியான வழியாக, அங்காடி பாணியில் இயக்க நெஞ்சறிந்து முயற்சிக்கக்கூடிய ஒரு திறந்த மூல செயல்திட்டம் எதிர்பாராத விதமாக கிடைத்தது. அதனால் சோதித்தேன் – அது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியானது.
இதுதான் அந்த செயல்திட்டத்தின் கதை. பயனுள்ள திறந்த மூல உரிவாக்கத்தைக்பற்றி சில முதுமொழிகளை எடுத்துரைக்க இதை உபயோகிக்கிறேன். இவையனைத்துமே நான் லைனக்ஸ் உலகில் முதலில் கற்றுக் கொண்ட பாடங்கள் இல்லை. ஆனால் இந்த லைனக்ஸ் உலகம் இவைகளுக்கு ஒரு குறிப்பிட்டக் கருத்தை எப்படிக் கொடுக்கிறது என்று பார்ப்போம். நான் சொல்வது சரியென்றால், எதனால் லைனக்ஸ் சமூகம் நல்ல மென்பொருள் ஊற்றாகத் திகழ்கிறது என்று உங்களுக்குப்புரிய அவை உதவும் ஒரு வேளை, உங்கள் ஆக்கவளம் அதிகரிக்கவும் அவை உதவலாம்.



